வாசிப்புச் சூழலில் நாம் காண்கிற நிர்கதியான நிலைமை ‘நவீனத்துவம்’ குறித்த விவாதத்தோடு முடிந்துவிடுவதாக இல்லை. மரணத்துக்கு இணையான புதிர்கள் நிறைந்த சமகால சிக்கல்களை நாம் அணுகும் விதங்களில் அது வெளிப்படுகிறது. பிரச்சனைகளை விளங்கிக் கொள்வதைவிடவும், விருப்பத்துக்கு ஏற்ப எதிரிகளை கட்டமைப்பதாக அமைந்துவிடுகின்ற வாசிப்புமுறைகளை எதிர்த்து நாம் இன்று போராட வேண்டியுள்ளது. நமக்குக் கிடைக்கிற பிரதிகளும், வாசிப்பு முறைகளும் இச்சிக்கலை விளங்கிக்கொள்ள உதவ முடியுமா என்பது சந்தேகமாகவே உள்ளது. இதனைக் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ள ரவிக்குமார், பிரதிகள் பற்றியும், ஆளுமைகள் பற்றியும் புறவயப்பட்ட நிலையில் பேசுவதைத் தவிர்த்து, இந்த அஞ்சலிக் கட்டுரைகளில் தமது சமகாலச் சிக்கல்களை அலச முயன்றிருக்கிறார். இங்கு ‘மரணம்’ என்பது வாழ்விலிருந்து வித்தியாசப்பட்ட ஒன்றாக, அதேசமயம் வாழ்வுக்கான அர்த்தத்தைத் தேட உதவும் ஒரு ‘குறி’யாக செயல்படுகிறது.