தமிழக அரசியல் பற்றிய செய்திகளும், விமர்சனங்களும் இந்நூல் முழுவதும் விரவிக் கிடக்கின்றன. இலங்கைக்கு கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்ட வரலாறு, தீக்குளிப்பின் அரசியல், இடதுசாரிகளின் ஈழத் தமிழர் பற்றிய நெறியற்ற மௌனம், தமிழக அரசியல் கட்சிகளின் தேர்தல் சார்ந்த சந்தர்ப்பவாதம், காலந்தோறும் தமிழகத் தமிழர்களின் குரல்களை உதாசீனப்படுத்தும் இந்திய நடுவண் அரசின் போக்கு என்று பல பதிவுகளை இந்நூல் நமக்கு வழங்குகிறது. இந்த பல்வேறுபட்ட பதிவுகள், செய்திகள், விமர்சனங்கள் மூலம், இந்நூல் தமிழர்கள் தங்களிடையேயுள்ள வேற்றுமைகளைத் தவிர்த்து, ஈழத் தமிழர்களுக்காக ஒன்றாகக் குரல் எழுப்புவதின் முக்கியத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது.