தமிழ்நாட்டில் பௌத்தமும் சமணமும் அழிக்கப்பட்ட பிறகு, இன்றைய தலித் சமூகங்களின் மூதாதையர் அறிவுத் துறையிலிருந்து முற்றிலுமாக ஒதுக்கிவைக்கப்பட்டனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழகத்தின் தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் மத்தியில் ஏற்பட்ட விழிப்புணர்வு அந்த வரலாற்றுக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க முனைந்தது. அயோத்திதாசப் பண்டிதர், எம்.சி.ராஜா, இரட்டைமலை சீனிவாசன், சுவாமி சகஜானந்தா போன்றோர் தலித்களின் வரலாற்றை மட்டுமல்ல, தமிழ் சமூகத்தின் வரலாற்றையும்கூட மீட்க முயன்றனர். தமிழர்களின் பூர்வீக மரபாக இருந்த பௌத்த சமயத்தின் அடிப்படையில் புதிய தமிழ் அடையாளத்தை ஏற்படுத்த முயன்றார் அயோத்திதாசர். இருபதாம் நூற்றாண்டில் பிறகு சுயமரியாதை இயக்கத்துக்கும் திராவிட இயக்கக் கட்சிகளுக்கும் தேவையான கோட்பாடுகளை உருவாக்கும் பணியை, நவீன தமிழ் தேசியத்துக்கான நாற்றங்காலை உருவாக்கும் பணியையும் அவரே செய்தார். ஆனால் காலம் காலமாக பார்ப்பனீயத்திலிருந்து தமிழ் அடையாளத்தைக் காப்பாற்றிவந்த ரௌத்தத்துக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தவர்களுக்கும், பிற்காலத்தில் பார்ப்பனீயத்துக்கு எதிராக கிளர்ந்தெழுந்த தலைவர்கள் அளித்த வெகுமதி என்ன? அயோத்திதாசர் உள்ளிட்டவர்களை முற்றிலுமாக புறக்கணித்ததும் மறக்கத் துணிந்ததும்தான். அந்த மறைக்கப்பட்ட வரலாற்றைத்தான் இந்த நூல் மீட்டெடுக்கிறது.