சாலை முகட்டில் வாகை மரத்தருகில் கையணைத்து முகத்திரை கூட்டி சற்றே உணர்ந்தேன் இவள் பேருடல். வைகறை. ஆங்கே குழவியோ ஆழ விழுந்தது வனத்தரையில். வாசித்த, சங்கக்கவிதை போலிருக்கிறதா? இது ஆர்தர் ரைம்போவின் கவிதை. ஃப்ரெஞ்சு மொழியின் நவீன கவிதை-யுகத்தைத் தொடங்கி வைத்த ஷார்ல் போதலேர் வழி சென்று அவரையும் மீறியவர் ரைம்போ. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஃப்ரெஞ்சு வாழ்க்கையின் உள்ளும் வெளியுமாகப் பல திணைப்பரப்புக்களைக் கடந்தவர்கள் இவர்கள் இருவரும். ஃப்ரெஞ்சு மொழியின் அகமும் புறமும் புதிதாகப் படைத்தவர்கள், பித்த நிலையில் இயங்கியவர்கள். தம் கவிதைகள் யாவையும் எழுதி முடித்திருந்த போது, ரைம்போவின் வயது இருபத்தொன்றே. பிரபஞ்சத்துக்கு எதிராகப் பெரும் கலகம் செய்த இந்தக் கவிஞன் பிறகு எழுதியவை கடிதங்கள் மாத்திரமே. ஃப்ரெஞ்சு மொழியிலிருந்து நேரடியாகத் தமிழாகி வந்திருக்கிறது, ரைம்போவின் முக்கியக் கவிதை-நூல், Les Illuminations. தமிழாக்கியிருப்பவர் நாகார்ஜுனன்.