பாழி
பெண்பாழி - 'உலகம் விரிகிற ஒரு தானியம்' என்றாள் முதல் ஸ்திரீயான தானியாள் எனப்பட்ட பச்சை நிறமானவள், இலைகள் மூடிய அகலமான அந்தத் தானியத்தை சுற்றிவந்த கல்பறவையை தானியாள் கேட்டாள், 'யாருக்காக இனி ராஜியத்தை அமைக்கப் போகிறாள்'. கண்ணீருக்காகவும் தானிய மணிகளில் பிறக்கப்போகிற உன் குழந்தைகளுக்காகவும் பறவைகளுக்காகவும் சூதறியா மிருகங்களுக்காகவும் இலைகள் படரும் விருட்சங்களுக்குமாக உலகம் இனி வரும்.
ஆண்பாழி - பாழி திறக்கும் எல்லாம் தாண்டி இரு உடல் ஓருயிராகிச் சுழலும் தீக்குழல் இரு பிளவுபட கொடுங்கழல் சுழன்றாடும் சாம்பல் விருட்சிகள் காற்றின் கோடுகளில் வருகிறார்கள், தகனத் தீயெழப் பிழைத்தான் சாம்பல் வண்ணான். ஓர் மூங்கில் வனமாய் ஜெனித்து அங்கொரு பெண் மூங்கில் நதிநடுவில் தொளை ஒழுகும் ஏற்றம். காலனை உதைத்து கழல் நெடு நீலியாய் குதிகழல் பந்தாய் வீசிக் கூத்துவாதலில் ஆடும் சாம்பல் வண்ணான் ஆவி வந்து தீங்குழல் கொம்புகளாய் வளைந்த மணல் ஆறு. அக்கினி பற்றாத வண்ணான் சிரசைத் தூக்கி மடியில் வைத்து சீத்தையிட்டுக் கூந்தல் விரித்தழுதாள் ராசாத்தி. 'தாட்டியத்தைச் சொல்லுங்களடி தோழிகளே... அவர் உயிர் எரியாமல் இருக்க எழும்புங்களடி சேடிகளே' என்றாள். எறும்புகடை எண்ணாயிரம் ஜீவ சந்து அத்தனையும் ஊர்ந்து இருவுடல் சேர்ந்து ஓருயிராகி சாம்பல் கோடு வரைந்து செல்ல அவள் உடுத்திய பட்டும் வண்ணான் உயிரும் இழை கருகாமல் மஞ்சள் வழமாய் தகதகவென மின்னியது. உப்புவனமானாள் ராசாத்தி. அவனோ சாம்பல் காட்டில் மூங்கில் மரமாகிச் சமைந்தான். புதர் உரசும் ஆந்தை அடையும் இருட்டில் மூங்கில் பற்றி எரியாது முன்சொல்ல ஏழுகன்னிமார் மூங்கிலில் உறைகிறார்கள்.
Main menu
Book Categories
- Politics (1)
