டார்வின் பிறந்து இருநூறு ஆண்டுகளாவதை ஒட்டி உலகமே கொண்டாடி வருகையில், தமிழில் ஒரு பதிவாவது செய்ய வேண்டும் என்னும் ஆசையில் இந்த நூலை முன் வைத்திருக்கிறார் சா. தேவதாஸ்.
''பொதுவான பார்வையாளன் நிலையில் ஒரு பெரும் ஆளுமையான சார்லஸ் டார்வின், எப்படிப்பட்ட மனிதராக விளங்கினார், அவரது நாளாந்த வாழ்க்கை நடைமுறை என்ன, அவரது நண்பர்கள் சகாக்களுடன் எவ்விதம் பழகினார் தொடர்பு கொண்டிருந்தார், மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் பார்வையில், அவர் எப்படிப்பட்ட நபராக விளங்கினார் என்று விளக்குவதை ஓரம்சமாக எடுத்துக் கொண்டேன். அவரது சிந்தனையும் கோட்பாடும் இயற்கை அறிவியல் தாண்டி, பிற அறிவியல் துறைகள் மட்டுமல்லாது, அரசியல் - பொருளாதார - சமூக கோட்பாடுகளிலும் செலுத்தியுள்ள தாக்கம் என்ன என்று பரிசீலிப்பது எனது இரண்டாவது அக்கறை. அவரை மதிப்பீடும் செய்யும் டி.எச். ஹக்ஸ்லியின் சொற்பொழிவு, ஜான் பெர்கரின் கட்டுரை, ஸ்டீபன் ஜே கோல்ட் மற்றும் ரிச்சர்ட் டாகின்ஸ் என்னும் அறிவியலாளர் காண் புதிய பார்வைகள் ஆகியவற்றைத் தமிழில் தருவது எனது மூன்றாவது ஆர்வம்.
எழுத்தாளர்கள், கலைஞர்கள், சிந்தனையாளர்கள் தொடர்பான விவாத இழைகளுடன், முடிந்தவரை சுவையான அறிமுக நூலாக இருக்க வேண்டும் என்னும் அக்கறையுடன் இதனை எழுதி முடித்திருக்கிறேன் என்னும் நம்பிக்கை எனக்கிருக்கிறது'' என்கிறார் சா.தேவதாஸ்.